லக்னோ: உத்தரகாண்ட் அமைச்சர் சபையில் இருந்து நீக்கப்பட்ட ஹரக் சிங் ராவத் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா ஆகிய மாநிலங்களுக்கு, வரும் பிப்ரவரி 14ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. உத்தரகண்ட் மாநிலத்தில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பாஜ ஆட்சி நடந்து வருகிறது. ஆனால், கடந்த ஓராண்டில் 3 முதல்வர்கள் பதவி ஏற்றுள்ளனர். மொத்தமுள்ள 70 சட்டசபை தொகுதிகளில் 36 தொகுதிகளை எந்த கட்சி கைப்பற்றுகிறதோ, அதுதான் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
இதை மையமாக வைத்து பிரசாரங்களும் வியூகங்களும் வகுக்கப்படுகிறது. எப்படியாவது ஆட்சியை தக்க வைத்து விட வேண்டும் என்பதில் பாஜ முனைப்பு காட்டி வருகிறது. 60 தொகுதிகளை கைப்பற்றுவோம் என்று நம்பிக்கையுடன் தெரிவித்து வருகிறது. அதே நேரத்தில், பாஜகவை தோற்கடித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உறுதியாக உள்ளது. இதனிடையே அமைச்சர் பதவியில் இருந்து ஹரக்சிங் ராவத் நீக்கப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. கோட்வார் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ஹரக் சிங் ராவத். இவர் தனது மருமகளுக்கு சீட் தராவிட்டால் பதவியை ராஜினாமா செய்யப்ப்போவதாக மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி அம்மாநில அமைச்சர் ஹரக் சிங் ராவத் பா.ஜ.க.வில் இருந்து அவரை சமீபத்தில் நீக்கி உத்தரவிட்டது. இந்நிலையில், உத்தரகாண்ட் அமைச்சர் சபையில் இருந்து நீக்கப்பட்ட ஹரக் சிங் ராவத் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பின்னர் பேசிய அவர்; பாஜக என்னை பயன்படுத்தி கொண்டு தூக்கி எறிந்துவிட்டது என கூறினார்.