தேசிய திறனாய்வு தேர்வுக்கு 19ம் தேதி ஹால்டிக்கெட்

சென்னை : பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகள் 19ம் தேதி முதல் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவிலான தேசிய திறனாய்வு தேர்வு அரசால் நடத்தப்படுகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எழுதும் இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவ மாணவியர் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள் படிப்பதற்காக ஒவ்வொரு மாதமும் ₹1250, உயர்கல்விக்கு செல்லும்போது மாதம் ₹2000 என உதவித் தொகை  வழங்கப்படுகிறது. இது  தவிர ஆய்வுப் படிப்புகளுக்கும் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இதன்படி இந்த ஆண்டுக்கான தேசிய அளவிலான திறனாய்வுத் தேர்வு 2022 ஜனவரி மாதம்  நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு கடந்த அக்டோபர் 29ம் தேதி வெளியானது. தற்போது கொரோனா பரவல் காரணமாக இந்த தேர்வு ஜனவரி 29ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வில் இடம் பெறும் கேள்வித்தாள்கள், 9, 10ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தின் அடிப்படையிலும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்தும் கேள்விகள் இடம் பெறும். இந்த தேர்வுக்கு பள்ளிகள் மூலம் விண்ணப்பித்த மாணவ மாணவியர் தங்களுக்கான ஹால்டிக்கெட்டுகளை இம்மாதம் 19ம் தேதி  முதல் இணைய  தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: