தண்டையார்பேட்டை : ராயபுரம் ரயில்வே மேம்பாலத்தில் நேற்று முன்தினம் நின்றிருந்த 5 பேர், அவ்வழியே வந்த போலீசாரை பார்த்து தப்பியோட முயன்றனர். அவர்களை பிடித்து சோதனை செய்த போது, 160 கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர்கள், விசாகப்பட்டினத்தை சேர்ந்த ரமணா (33), சத்யவதி (32), புழல் பகுதியை சேர்ந்த மூவேந்தன் (29), புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த சூர்யா (29), தண்டையார்பேட்டை விநாயகபுரத்தை சேர்ந்த சுப்பிரமணி (42) என தெரியவந்தது.
இதில், ரமணா, சத்யவதி ஆகியோர் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, மூவேந்தன், சூர்யா, சுப்பிரமணி ஆகியோரிடம் கொடுக்க முயன்றதும், இவர்கள் பல்வேறு பகுதிகளில் கஞ்சாவை சில்லறை விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது. அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். நொளம்பூர் சர்வீஸ் சாலை வழியாக பைக்கில் கஞ்சா கடத்திய திருவேற்காடு பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி பாலு (22) என்பவரை போலீசார் கைது செய்து, 2 கிலோ கஞ்சா மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.