சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயாராணி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாவட்டத்தை சார்ந்த 2,900 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக, 5 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி தொகையுடன் 8 கிராம் தங்க நாணயத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை மாவட்டத்தை சேர்ந்த 100 பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்க நாணயங்களை நேற்று வழங்கினார்.
இந்த திட்டத்தின் கீழ், 2021-22ம் நிதியாண்டில் சென்னை மாவட்டத்தில் பட்டம், பட்டயப்படிப்பு படித்த 2,149 பெண்களுக்கு ரூ.50,000 வீதம் ரூ.10.75 கோடி திருமண நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்க நாணயம், பட்டம், பட்டயப்படிப்பு அல்லாத 751 பெண்களுக்கு ரூ.25,000 வீதம் ரூ.1.88 கோடி திருமண நிதியுதவி மற்றும் தலா 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்பட உள்ளது. நிகழ்ச்சியில், துணை ஆணையாளர் (சுகாதாரம்) மனிஷ், மாநகர மருத்துவ அலுவலர் ஹேமலதா, குழந்தைகள் நல இணை இயக்குநர் சுந்தரி, மாவட்ட சமூக நல அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.