திருமண உதவி திட்டங்களின் கீழ் 94,700 பயனாளிகளுக்கு 8 கிராம் தங்க நாணயத்துடன் நிதியுதவி வழங்கும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: திருமண உதவி திட்டங்களின் கீழ் 94,700 பயனாளிகளுக்கு 8 கிராம் தங்க நாணயத்துடன் நிதியுதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் செயல்படுத்தப்படும் திருமண உதவி திட்டம் என்பது பெண்களின் உயர் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையிலும், பெண்களின் திருமணத்திற்காக பெண் குழந்தைகளின் பெற்றோருக்கு திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்கு தங்க நாணயம் அளிக்கும் வகையிலும், ஏழை பெற்றோரின் மகள், ஆதரவற்ற பெண்கள், மறுமணம் செய்து கொள்ளும் விதவையர், ஏழை விதவையரின் மகள், கலப்பு திருமணம் செய்துகொள்ளும் தம்பதியர் ஆகியோர் பயன்பெறும் வகையிலும் செயல்படுத்தப்படும் தலையாய திட்டமாகும்.

இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 8 கிராம் தங்க நாணயத்துடன் நிதியுதவியும் வழங்கப்பட்டு வருகிறது. திருமண நிதியுதவி திட்டங்களின் கீழ் 2021-22ம் நிதியாண்டிற்கு ரூ.762 கோடியே 23 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பட்டம், பட்டயப் படிப்பு படித்த 53,599 பயனாளிகள், பட்டதாரியல்லாத 41,101 பயனாளிகள் என மொத்தம் 94,700 பயனாளிகள் பயனடைய உள்ளனர்.முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில், சென்னை மாவட்டத்தை சார்ந்த 2,900 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக 5 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி தொகையுடன் 8 கிராம் தங்க நாணயத்தை வழங்கினார்.

நிகழ்ச்சியில், உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தலைமை செயலாளர் இறையன்பு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஷம்பு கல்லோலிகர், சமூகநல இயக்குநர் ரத்னா மற்றும் அரசு உயர் அதிகாாிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: