பொதுச்செயலாளர் தான்தான் என்று கூறிவரும் விவகாரம் அதிமுக புகாரில் சசிகலா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? போலீசார் அறிக்கை தர சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சசிகலா மீது அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து  எழுத்துபூர்வமாக விளக்கம் அளிக்க மாம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

 சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘அதிமுகவில் பொது செயலாளர் பதவி நீக்கப்பட்டு, அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. கட்சிக்கு உரிமை கோரிய சசிகலாவின் மனு தேர்தல் ஆணையம், டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. ஆனால், அவர் அதிமுகவின் பொதுச் செயலாளர் என்று தொடர்ந்து தன்னை பிரகடனப்படுத்தி வருகிறார்.

இதை தடுக்கவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாம்பலம் காவல் நிலையத்தில் அதிமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.   இந்த புகார் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சசிகலா மீது நடவடிக்கை எடுக்குமாறு மாம்பலம் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு சைதாப்பேட்டை  17வது நீதித்துறை நடுவர் கிருஷ்ணன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, அதிமுக சார்பில் மாம்பலம் காவல் நிலைத்தில் அளிக்கப்பட்ட புகாரில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை வரும் 20ம் தேதி மாம்பலம் இன்ஸ்பெக்டர் எழுத்துபூர்வமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

Related Stories: