சென்னை: திருவான்மியூரில் கொரோனாவால் வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கருவியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று நேரில் சென்று வழங்கினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: கொரோனாவால் பாதிக்கப்பட்ட 21 ஆயிரத்து 987 பேர் அவர்களின் வீடுகளிலே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களை காண்காணிக்கும் வகையில் 15 மண்டலங்களிலும் மருத்துவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 178 பேர் பொதுமக்களிடம் தொலைபேசி மூலம் ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள். மேலும், ஒரு வட்டத்திற்கு 5 பேர் வீதம் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு 1000 தன்னார்வலர்கள் களப்பணி ஆற்றி வருகிறார்கள்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: தொற்று பரிசோதனைக்காக வருபவர்களில் 85 சதவீதம் பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி இருக்கிறது. இப்போது, வரும் பாதிப்பு எல்லாமே எஸ் ஜீன் வகையை சேர்ந்தது. அதனால், ஒமிக்ரான் பரிசோதனை செய்யப்படுவதில்லை. ஆனால், புதிய வைரஸ் பரவுகிறது என்றால் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கிறோம்.