ரயில்வே சீசன் டிக்கெட்டில் தடுப்பூசி சான்று எண்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: பயணிகளுக்கு ரயில்வே வழங்கும் சீசன் டிக்கெட்டுகளில் தடுப்பூசி போட்ட சான்றிதழின் எண் அச்சிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்த சூழ்நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இதனை கருத்தில் கொண்டு இன்று முதல் மின்சார ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் என நேற்று முன்தினம் தெற்கு ரயில்வே அறிவித்தது.

அதன்படி சாதாரண பயணிகளும், சீசன் டிக்கெட் வைத்திருக்கும் பயணிகளும், கட்டாயம் டிக்கெட் கவுன்ட்டருக்கு வரும் போதும், மின்சார ரயிலில் பயணம் மேற்கொள்ளும் போதும் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை கையில் வைத்திருக்க வேண்டும். மேலும் இது இன்று முதல் 31ம் தேதி வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து வரும் நாட்களில் சீசன் டிக்கெட்டில் தடுப்பூசி சான்றிதழின் எண் அச்சிட தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி தடுப்பூசி சான்றிதழின் கடைசி 4 எண்கள் சீசன் டிக்கெட்களில் அச்சிடப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: