காஞ்சிபுரம் சரகத்தில் 36 சிறப்பு தனிப்படை அமைப்பு 1894 ரவுடிகளை பிடிக்க பட்டியல் தயார்: டிஐஜி சத்யப்பிரியா பேட்டி

சென்னை: காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யப்பிரியா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:செங்கல்பட்டில் கடந்த 6ம் தேதி 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அடுத்தடுத்து நடந்த கொலை தொடர்பாக 2 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டனர். கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க சென்றபோது போலீசாரை தினேஷ் மற்றும் மொய்தீன் ஆகியோர் தாக்க முயன்றனர். அப்போது தற்காப்புக்காக போலீசார், அவர்களை துப்பாக்கியால் சுட்டனர். அதில் 2 பேரும் இறந்தனர். இறந்த தினேஷ், மொய்தீன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.காஞ்சிபுரம் சரகத்தில் அடங்கிய செங்கல்பட்டில் 7, திருவள்ளூரில் 18, காஞ்சிபுரத்தில் 9 பேர் என மொத்தம் 34 பேர் முதன்மை குற்றவாளிகளாக இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களின் நடவடிக்கைகள் மீது தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். அவர்களை தவிர திருவள்ளூரில் 720, செங்கல்பட்டில் 582, காஞ்சிபுரத்தில் 592 பேர் உள்பட மொத்தம் 1894 பேர் அடங்கிய பட்டியலை தயார் செய்துள்ளோம்.

அதிகமான குற்றங்கள் கஞ்சா போதையால் ஏற்படுகிறது. இதையொட்டி, கடந்த 7 மாதங்களாக நடத்தப்பட்ட சோதனையில் 358 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே காஞ்சிபுரம் சரகத்தில் மட்டும் 1200 குற்றவாளிகளிடம் இருந்து எந்த தவறும் செய்ய மாட்டோம் என நன்னடத்தை பிணையப்பத்திரம் பெறப்பட்டு, அவர்களை கண்காணிக்கிறோம். அவர்கள் தவறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களை உள்ளடக்கிய காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரவுடிகளை கைது செய்யவும், குற்றச் செயல்களை முழுமையாக தடுக்கவும் 36 பேர் கொண்ட சிறப்பு தனிப்படை உருவாக்கப்பட்டுள்ளது.தனிப்படையினர், ரவுடிகளின் நடமாட்டங்களை கண்காணிக்கின்றனர். பொதுமக்களும் சந்தேகப்படும்படி, யாராவது இருந்தால் போலீசாரிடம் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்கள் குறித்து ரகசியம் காக்கப்படும். போலீசாரின் செயல்பாடுகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம் என்றார்.

Related Stories: