சென்னை: 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.2 டோஸ் போட்டதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்றும் மாதாந்திர அட்டை வைத்திருப்பவர்களுக்கும் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்றும் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட பிரிவு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. . நீண்ட நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 10,00-ஐ நெருங்கி வருகிறது.
ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதனால்தான் தினமும் இரவு ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கில் அரசு, தனியார் பஸ்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்ட போதிலும், சென்னை புறநகர் மின்சாரா ரயில்கள் குறைந்தளவு இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை புறநகர் ரயிலில் பயணிக்க புதிய கட்டுப்பாடுகளை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது 2 டோஸ் தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே சென்னை புறநகர் ரயிலில் பயணிக்க முடியும் என்று தெற்கு ரயில்வே கூறியுள்ளது.
இதேபோல் புறநகர் ரயிலில் மாஸ்க் அணியாமல் பயணித்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணியாமல் ரயில் நிலையத்தில் சுற்றினாலும் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் புறநகர் ரயிலில் செல்பவர்கள் வருகிற 31-ம் தேதி வரை UTS செயலில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் ஜனவரி 10-ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்று தெற்கு ரயில்வே கூறியுள்ளது.