பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை விவகாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபிக்கு விசாகா குழு அறிக்கை தரப்பட்டுள்ளது: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

சென்னை: பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபிக்கு எதிராக, பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடுப்பு சட்டப்படி விசாரணை நடத்த, கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 பேர் அடங்கிய விசாகா குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து, விசாகா குழு விசாரணை நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், விசாரணை குழுவை மாற்றியமைக்க கோரி உள்துறை செயலருக்கு மனு அளித்து, அது பரிசீலிக்கப்படும் முன்பே விசாரணை துவங்கி விட்டது. சாட்சிகளின் வாக்குமூலங்களை கூட தனக்கு வழங்கவில்லை. எனவே, தற்போதைய விசாகா குழுவை கலைத்துவிட்டு, முறையாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, விசாகா குழு விசாரணை அறிக்கையும், முடிவுகளும் மூடி முத்திரையிட்ட உறையில் தமிழக அரசு தாக்கல் செய்தது. வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, விசாகா கமிட்டி விசாரணை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபிக்கு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  அப்போது, துறை ரீதியான நடவடிக்கை தொடரக்கூடாது என்ற இடைக்கால உத்தரவை நீட்டிக்க கூடாது என்று அரசு தரப்பிலும், வழக்கு முடியும் வரை நீட்டிக்க வேண்டுமென்று சஸ்பெண்ட்டான சிறப்பு டிஜிபி தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது.  இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, வழக்கு குறித்து விசாகா குழு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். துறை ரீதியான நடவடிக்கையை தொடரக்கூடாது என்ற இடைக்கால உத்தரவு நீட்டிக்கப்படுகிறது. வழக்கின் இறுதி விசாரணை ஜனவரி 27ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

Related Stories: