டெல்லி: கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கான வீட்டுத் தனிமை குறித்து புதிய விதிகளை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. தனியார் மருத்துவமனைகளிலும், வீட்டு தனிமையிலும் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு போதிய மருத்துவ கண்காணிப்பு மற்றும் சிகிச்சை முறைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் அறிகுறி அல்லாத அல்லது குறைந்த பாதிப்புடன் வீடுகளிலும் பொதுமக்கள் அதிக அளவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோன்று கடந்த சில நாட்களாக ஒமிக்ரான் பரவலும் ஏற்பட்டு உள்ளது. இதனை முன்னிட்டு ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் கொரோனா தொற்று உறுதியானவர்களுக்கான வீட்டுத் தனிமை குறித்து புதிய வழிகாட்டுதல்களை ஒன்றிய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.