சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் 13 உதவி இயக்குநர்கள், 86 குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் 13 உதவி இயக்குநர்கள் மற்றும் 86 குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். குழந்தைகள், மகளிர், மூத்த குடிமக்கள், திருநங்கைகள் போன்ற சமூகத்தின் நலிவுற்ற பிரிவினரின் நலனுக்கென சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் மூலம் பல்வேறு நல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இத்துறையின் சமூகநல திட்டங்களை செம்மையாக செயல்படுத்தும் பொருட்டு மாவட்ட அளவில் உதவி இயக்குநர் நிலையில் மாவட்ட சமூக நல அலுவலர்கள் மற்றும் மாவட்ட திட்ட அலுவலர்களும், வட்டார அளவில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் 13 உதவி இயக்குநர்கள் மற்றும்  86 குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், தலைமை செயலாளர் இறையன்பு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் இயக்குநர் மற்றும் குழும இயக்குநர் அமுதவல்லி, சமூகநலத்துறை இயக்குநர் ரத்னா, சமூக பாதுகாப்பு துறை இயக்குநர் வளர்மதி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: