சென்னை: குழந்தைகள் நலக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழு நியமனம் தொடர்பான தமிழ்நாடு சிறார் நீதி சட்ட விதிகளை திருத்த, தமிழக அரசுக்கு 2 வாரம் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய அரசின் சிறார் நீதி சட்ட விதிகளைப்போல, தமிழ்நாடு சிறார் நீதி சட்ட விதிகளை திருத்தக்கோரி காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் நலக் குழு உறுப்பினர் ஷஹிருதின் முகமது என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், மத்திய அரசின் சிறார் நீதி சட்டப்படி, குழந்தைகள் நலக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், இயக்குனர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி ஒருவர், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் இருவர் உள்பட ஏழு பேர் கொண்ட குழுவை நியமிக்க வேண்டும் என்ற நிலையில், தமிழக அரசு விதிகள், மாவட்ட நீதிபதி, ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் அடங்கிய குழுவை அமைக்க கூறுவது சட்டவிரோதமானது. குழந்தைகள் காப்பகங்களை நடத்துவோர் குழுக்களில் இடம் பெறக்கூடாது என்று ஒன்றிய அரசு விதிகள் வலியுறுத்துகிறது.