இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வரும் கல்வியாண்டில் புதிதாக 6 கல்லூரிகள் தொடங்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் கல்விக்குழு ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆணையர் குமரகுருபரன், ஆர்.எம்.கே. கல்விக் குழு நிறுவனத் தலைவர் ஆர்.எஸ். முனிரத்தினம், தியாகராஜா பொறியியல் கல்லூரி  தலைவர் கருமுத்து, கண்ணன், சென்னை பப்ளிக் பள்ளி குழுமம் தலைவர் தேவராஜன்,  சென்னை வேலம்மாள் கல்விக் குழுமம் வேல் மோகன்,  எவர்வின் கல்விக் குழுமம் புருஷோத்தமன், டி.ஏ.வி. கல்விக் குழுமம் மூத்த முதல்வர் ராஜேந்திரன்,  சேது பாஸ்கரா கல்விக் குழுமம் சேது குமணன், கற்பக விநாயகம் கல்வி அறக்கட்டளை அறங்காவலர் அண்ணாமலை கூடுதல் ஆணையர் ஹரிப்ரியா ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: கோயில்கள் சார்பில் நடத்தப்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை எளிய குழந்தைகளின் கல்வி தரத்தை மேம்படுத்தவும், குறைவான கட்டணத்தில் தரமான கல்வி கிடைக்கும் வேண்டும் என்ற நோக்கத்திற்காக தமிழகத்தில் உள்ள சிறந்த கல்வியாளர்களை ஒருங்கிணைந்து கல்விக்குழு அமைக்கப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகம் சார்பில் 35 பள்ளிகள், 9 கல்லூரிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது புதிதாக இந்தாண்டு தொடங்கப்பட்ட 4 கல்லூரிகளில் 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அடுத்த கல்வியாண்டில் 6 புதிய கல்லூரிகள் தொடங்கப்படவுள்ளன.

மேலும், புதிதாக தொடங்கப்பட்டுள்ள 4 கல்லூரிகளுக்கான தேவையான புதிய கட்டிடங்கள், மாணவ, மாணவிகள் தங்கும் விடுதிகள், கூட்டரங்கம், விளையாட்டு மைதானம், ஆய்வகம், நூலகம், வாகனம் நிறுத்துமிடம், படிக்கும் அறை உள்ளிட்டவை சிறந்த முறையில் கட்டவும், அவற்றுக்கு தேவையான சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தவும், கூடுதலாக தொடங்கப்பட உள்ள பாட திட்டங்கள் தொடர்பாகவும், கூடுதல் வகுப்பறைகள் அமைக்கவும், பொது அறிவுத்திறன் வளர்த்தல், மாணவர்களது கலைத் திறனை வெளிப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. கல்விக்குழுவினரிடம் புதிய கல்லூரி கட்டிட வரைப்படங்கள் காண்பிக்கப்பட்டது. அதில் சில மாற்றங்கள் செய்ய கல்வியாளர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். அதன்படி மாற்றங்கள் செய்யப்பட்டு தமிழக முதல்வரின் ஒப்புதலுடன் விரைவில் பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: