மதுரை: ராஜேந்திரபாலாஜி பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது, பல கோடி முறைகேடு நடந்தது தொடர்பாக, மதுரை ஆவினில் விஜிலென்ஸ் அதிகாரிகள் நடத்திய ஆய்வில், முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளன. அதிமுக ஆட்சிக்காலத்தில் மதுரை ஆவினில் ஊழியர்கள் தேர்வு, பால், நெய், வெண்ணெய் உற்பத்தியிலும் மோசடி நடந்ததாக ஆவின் தலைமைக்கு புகார்கள் சென்றன. இதுதொடர்பாக அப்போதைய ஆவின் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆனால், அப்போது, பால்வளத்துறை அமைச்சராக ராஜேந்திரபாலாஜி இருந்ததால், மேல் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் முடக்கி வைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. தற்போது அவரை ரூ.3 கோடி மோசடி புகாரில் தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.