சென்னை: திருவொற்றியூரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கடந்த 1993ம் ஆண்டு கட்டப்பட்ட 3 மாடி கொண்ட பழைய குடியிருப்பு, நேற்று முன்தினம் காலை திடீரென பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இதில் அங்கிருந்த 24 வீடுகளும் தரைமட்டமாயின. அதிர்ஷ்டவசமாக அந்த குடியிருப்பில் வசித்தவர்கள் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர். முன்னதாக, அந்த குடியிருப்பு கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டதை அறிந்த தனியரசு என்பவர், உடனடியாக அங்குள்ள மக்களை வெளியேற்றினார். பின்னர் இதுபற்றி தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.