கூடுவாஞ்சேரி: காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம் கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூர் முதல்நிலை ஊராட்சியில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி, காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளரும், ஊரக தொழில்துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன் வழிகாட்டுதலின் பேரில், மாவட்ட சேர்மன் படப்பை மனோகரன் பரிந்துரையில், ஆதனூர் முதல்நிலை ஊராட்சியில் ₹2.5 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. ஒன்றிய கவுன்சிலர் மலர்விழி தமிழமுதன் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் அமுதாசெல்வம், ஒன்றிய கவுன்சிலர் சரஸ்வதி மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி மன்ற துணை தலைவர் செல்வி ரவி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தொழிலதிபரும், ஆதனூர் முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவருமான டி.தமிழமுதன் கலந்துகொண்டு 24 மணி நேரமும் செயல்படும் ஆம்புலன்ஸ், பசுமை திட்டத்தின் கீழ் 500 மரக்கன்றுகள், 5 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம், ₹1 கோடியில் 2000 தெரு விளக்குகள், ₹50 லட்சத்தில் 10க்கும் மேற்பட்ட புகையில்லா குப்பை சேகரிக்கும் வாகனம், 2 டிராக்டர்கள் ஆகியவற்றை ரிப்பன் வெட்டி, கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும், 150 இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தவும், புறக்காவல் அமைப்பதற்கான பணிகளும், மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்குவதற்காக ஒவ்வொரு வீடுகளுக்கும் தலா 2 பக்கெட்டுகள் வழங்கினார்.