ஆரணி, மேற்கு ஆரணி ஒன்றியங்களில் 49 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உபகரணங்கள்-மாவட்ட கல்வி அலுவலர் வழங்கினார்

ஆரணி : ஆரணி, மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு,  வட்டார கல்வி அலுவலர்  உதயகுமார் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் அறிவழகன்,  வட்டார வளமைய மேற்பார்வையாளர் பாவை, மாற்றுத்திறனாளிகள் மாணவர் ஒருங்கிணைப்பாளர் மணிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வட்டார வளமேற்பார்வையாளர் ஜெயசீலி வரவேற்றார். இதில், மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளி மாணவர்கள் 49 பேருக்கு வீல்சேர், காதுகேட்கும் கருவி உள்ளிட்ட உதவி உபகரணங்கள் வழங்கினார்.இதேபோல், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு ஆரணி கல்வி மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு போட்டி நேற்று நடத்தப்பட்டது. இதில், சிறப்பு அழைப்பாளரக மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

அப்போது, மாணவர்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியம், நடனம், வினாடி-வினா, பாட்டுப்போட்டி, குழுநடனம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் போட்டியில் கலந்து கொண்டனர்.  வெற்றிப்பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெறவுள்ள போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

Related Stories: