உடல்நலக்குறைவால் பிஇ படிப்பை பாதியில் நிறுத்திய மாணவியை சேர்க்க வேண்டும்: அண்ணா பல்கலைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் 1046 மதிப்பெண்கள் பெற்றிருந்த சென்னையை சேர்ந்த மாணவி நித்யா, கடந்த 2016ம் ஆண்டின் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கலந்தாய்வின் மூலம் உறுப்பு கல்லூரியான ஜேப்பியார் கல்லூரியில் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பிரிவில் சேர்ந்துள்ளார்.கடந்த 2016 முதல் 2020 வரையிலான 8 செமஸ்டர்களை கொண்ட கல்வியாண்டில் 4 செமஸ்டர்கள் வரை  கல்லூரிக்கு சென்று வந்த அவர், உடல்நலக்குறைவின் காரணமாக 2018 முதல் கல்லூரிக்கு செல்லவில்லை.அதன் காரணமாக கல்லூரி நிர்வாகம் அவருக்கு மாற்றுச் சான்றிதழை வழங்கியதோடு அவரின் இடைநிற்றலை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது.இந்நிலையில், உடல்நிலை சீரானவுடன் மாணவி கடந்த ஜூலை மாதம் முதல் மீண்டும் ஜேப்பியார் கவ்வி நிலையத்தின் கல்லூரியில் சேர்ந்து படித்து வந்ததோடு ஜனவரி  2022ல் நடைபெறவுள்ள 5வது செமஸ்டருக்கான தேர்வு கட்டணத்தை செலுத்தியுள்ளார்.

மாணவியின் மறுசேர்க்கைக்கு அனுமதி வழங்குமாறு கல்லூரி நிர்வாகம் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்துக்கு விண்ணப்பித்த நிலையில், அதனை பரிசீலித்த அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர், மாணவியின் மறுசேர்க்கைக்கான விண்ணப்பத்தை நிராகரித்து உத்தரவிட்டார். படிப்பை தொடர வேண்டுமானால் மீண்டும் முதலாம் ஆண்டில் இருந்து தான் தொடங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, மறு சேர்க்கைக்கு அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்ய கோரி உயர் நீதிமன்றத்தில் மாணவி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது.மாணவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், படிப்பை தொடர முடியாமல் இடைநின்ற மாணவர்கள் மீண்டும் சேர்வதற்கு 2008ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை வழிவகை செய்கிறது என்று தெரிவித்தார்.அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மாணவியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மாணவியின் மறு சேர்க்கைக்கு அனுமதி வழங்க வேண்டும். ஜனவரி 2022ல் நடைபெற உள்ள ஐந்தாவது செம்ஸ்டர் தேர்வெழுத அவரை அனுமதிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Related Stories: