டெல்லி: லக்கிம்பூர் கெர்ரி விவசாயிகள் கொலையில் இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் பதவியை பறிக்கக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் டெல்லியில் கண்டன பேரணி நடத்தினர். காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தலைமையில் தொடங்கிய இந்த பேரணி, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையில் இருந்து தொடங்கியது. விஜய் சவுக் என்ற இடத்தில் இந்த பேரணி நிறைவுபெற்றது. பேரணியின் போது பேசிய ராகுல்காந்தி, லக்கிம்பூர் கெர்ரி சம்பவம் திட்டமிட்ட சதி என்று சிறப்பு புலனாய்வு குழு கூறியுள்ளதை சுட்டிக்காட்டினார். இதில் பிரதமர் மோடி எதுவுமே செய்யவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். சம்பவத்திற்கு காரணமாக இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யாதது ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.