கோயம்பேடு மார்க்கெட்டில் பிளாஸ்டிக்கை ஒழிக்க நடவடிக்கை; வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல்

அண்ணாநகர்: ஆசியாவின் மிகப்பெரிய சந்தையாக கோயம்பேடு மார்க்கெட் விளங்கி வருகிறது. இங்கு மலர், காய்கறி, பழங்கள் என மொத்த, சிறுமொத்த மற்றும் சில்லறை விற்பனை வளாகங்கள் இயங்கி வருகின்றன. இவ்வளாகத்தில் வியாபாரிகள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், பொதுமக்கள் என நாள்தோறும் ஒரு லட்சம் பேர் வந்து செல்கின்றனர். இங்குள்ள பூ அங்காடியில் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட 50 கிலோ பிளாஸ்டிக் கவர்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இங்குள்ள அனைத்து கடைகளிலும் அதிரடி சோதனைகள் நடைபெறும் என தெரிவித்தனர். இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் இயங்கி வரும் அனைத்து கடைகளிலும் புழங்கி வரும் பிளாஸ்டிக் பை பயன்பாட்டை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, நேற்று மார்க்கெட் நிர்வாக அலுவலர் சாந்தியிடம் சிறுமொத்த காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் மனு அளித்தனர். இம்மனுமீது உரிய நடவடிக்கை எடுக்க 3 நாட்கள் சிஎம்டிஏ நிர்வாகம் கால அவகாசம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமொத்த காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் முத்துகுமார் கூறுகையில், கோயம்பேடு மார்க்கெட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடை செய்ய முழு முயற்சி எடுத்து வருகிறோம். இதில் பலர் பிளாஸ்டிக் கவர்களில் எடுத்து வந்து காய்கறி, பழங்களை விற்பனை செய்கின்றனர். இங்கு 3 நாட்களுக்குள் பிளாஸ்டிக் பை பயன்பாட்டுக்கு தடை விதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், அதிகாரிகளின் மெத்தனப் போக்கை கண்டித்து சிறுமொத்த காய்கறி வியாபாரிகள் சங்கம் சார்பில் ஒரு நாள் கவனஈர்ப்பு போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.

Related Stories: