டெல்லி: உத்திரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மீது பிரதமர் நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? என்று சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர். லக்கிம்பூர் சம்பவம் கவனக்குறைவால் நடந்தது அல்ல; திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை அளித்துள்ளது. இதனை சுட்டிக்காட்டி மக்களவையில் நேற்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கம் எழுப்பியதால் அவை நடவடிக்கைகள் நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. இது தொடர்பாக உத்திரப்பிரதேசத்தில் நடைபெற்ற பேரணியில் பேசிய சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் லக்கிம்பூர் சம்பவம் தொடர்பான ஆய்வு அறிக்கையில் ஒன்றிய இணை அமைச்சரின் மகன் சம்பந்தப்பட்டது தெளிவாகியுள்ளது என்றார்.