டாஸ்மாக்கில் வேலை, கொலை மிரட்டல்; 2 வக்கீல்கள் தொழில் செய்ய தடை: தமிழ்நாடு பார்கவுன்சில் நடவடிக்கை

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலாளர் ராஜகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பூந்தமல்லியை சேர்ந்த வக்கீல் விமல்குமார் மீது பார் கவுன்சிலில் பெண் ஒருவர் புகார் அளித்தார். அதில், மனநலம் குன்றிய தன் மகனையும், தன்னையும் கொலை மிரட்டல் விடுத்து பெருந்தொகை பணமும், தங்கநகைகளையும் விமல்குமார் பெற்றுக் கொண்டதாகவும், தன் கணவரின் கையெழுத்தை போலியாக போட்டு சொத்து ஆவணங்களை தவறாக பயன்படுத்துவதாகவும் கூறியிருந்தார்.

 மேலும், பூந்தமல்லி பார் அசோசியேசன் அலுவலகத்துக்குள் நுழைந்து அங்குள்ள மேஜை, நாற்காலிகளை சேதப்படுத்தியது மட்டுமல்லாமல், அசோசியேசனின் செயலாளரை அவதூறாக பேசி அங்கிருந்தவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல, காஞ்சிபுரத்தை சேர்ந்த இளையராஜா டாஸ்மாக் கடையில் வேலை செய்து கொண்டே சட்டப்படிப்பை படித்துள்ளார். இந்த உண்மையை மறைத்து, பார் கவுன்சிலில் பதிவு செய்துள்ளார். தற்போது முழு நேர டாஸ்மாக் ஊழியராகவும் பணியாற்றி வருகிறார். எனவே, விமல்குமார், இளையராஜா ஆகியோர் வக்கீல் தொழில் செய்ய தடை விதிக்கப்படுகிறது.

Related Stories: