அவதூறு வழக்கில் நடிகர் விஜய் சேதுபதி ஆஜராக சம்மன்: சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த நடிகர் மகா காந்தி என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், மருத்துவ பரிசோதனைக்காக மைசூர் செல்வதற்காக நவம்பர் 2ம் தேதி இரவு பெங்களூரு விமான நிலையம் சென்றிருந்தேன். அங்கு நடிகர் விஜய் சேதுபதியை எதிர்பாராதவிதமாக சந்தித்தேன். திரைத்துறையில் அவரின் சாதனைகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தேன். எனது வாழ்த்துகளை ஏற்க மறுத்த விஜய் சேதுபதி பொதுவெளியில் என்னை இழிவுபடுத்தி பேசினார். சாதியை பற்றி தவறாக பேசினார். உண்மை சம்பவங்கள் இவ்வாறிருக்க, மறுநாள் ஊடகங்களில் என் மீது விஜய் சேதுபதி தரப்பில் அவதூறு பரப்பியுள்ளனர். எனவே, நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு சைதாப்பேட்டை 9வது பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், நடிகர் விஜய் சேதுபதி, அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் ஜனவரி 4ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தனர்.

Related Stories: