ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் பயணிகளிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்: போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் அறிவுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக செயல்பாடுகள் குறித்து நேற்று தலைமையகத்தில் போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் கே.கோபால் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் செயல்பாடுகள் குறித்து போக்குவரத்துத் துறையின் முதன்மைச் செயலாளர் டாக்டர்.கே.கோபால் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். இக்கூட்டத்தில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநர் கு.இளங்கோவன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள். இக்கூட்டத்தில் அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகப் பேருந்துகளின் இயக்கம், பயணிகளின் பயன்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பேருந்தின் வசூல் வருவாயை தவிர்த்து பிற இனங்களில் வருவாய் ஈட்டக்கூடிய வழிமுறைகளை ஆய்வு செய்யவும், நவீன தொழில்நுட்பங்களை புகுத்தி, அதன்மூலம் பேருந்துகளின் இயக்கத்தை கண்காணிக்கவும், பேருந்துகளின் பராமரிப்பை மேம்படுத்தவும் பயணிகளுக்கு கூடுதல் விவரங்களை தருவதோடு, பேருந்துகளை சுத்தமாக தடத்தில் அனுப்பவும், பேருந்துகள் சரியான நேரத்தில் சென்றடையும் வண்ணம் இயக்கிட வேண்டும் என்றும், இதன் மூலம் பேருந்தின் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் பயணம் நன்முறையில் இருக்கும் வகையில் பணிபுரியவும் அறிவுரைகள் வழங்கினார்கள்.

பயணம் செய்யும் பயணிகளின் குறைகளை நீக்க, புதிய தொழில்நுட்பங்கள் வாயிலாக சரி செய்யவும் கேட்டுக் கொண்டார். ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் பயணிகளிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். இக்கருத்துக்களை அனைத்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கும் சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்திட உத்தரவிட்டார்.

Related Stories: