ஏழைகள் என்றால் கிள்ளுக்கீரையா? கேட்க நாதி இல்லை எனும் எண்ணமா? ; கமல்ஹாசன் ஆவேசம்

நாகர்கோவில்  : நாகர்கோவில் - திருநெல்வேலி பஸ்சில் குறவர் குடும்பம் ஒன்று நேற்று பயணம் செய்தது. கண்டக்டர் திடீரென விசில் அடித்து நிறுத்தி, பார்வை குறைபாடுடைய கணவர், மனைவி, குழந்தை ஆகிய குறவர் குடும்பத்தினரை கீழே இறக்கி விட்டதுடன், அவரது உடமையையும் தூக்கி எறிந்துள்ளார். உடனே ஆட்டோ டிரைவர் ஒருவர் அவர்களுக்கு உதவி இருக்கிறார்.  இதனை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரல் ஆன நிலையில் இது தொடர்பாக போக்குவரத்து கழக அதிகாரிகளும், போலீசாரும் இதுபற்றி விசாரணை நடத்தியதோடு, சம்பந்தப்பட்ட குறவர் குடும்பத்தினரை தேடிவருகின்றனர். மேலும் நரிக்குறவர்களை நடுவழியில் இறக்கிவிட்ட அரசு பேருந்து ஓட்டுநர் நெல்சன்  மற்றும் நடத்துநர் ஜெயபாலன் ஆகியோரை பணி இடைநீக்கம் செய்து போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசுப் பேருந்திலிருந்து மீன் விற்கும் மூதாட்டி வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்பட்ட சம்பவத்தால் தமிழகமே கொதித்துக்கிடக்கிறது. நேற்று குறவர் இனத்தைச்சேர்ந்த ஒரு ஏழைக்குடும்பம் பேருந்திலிருந்து வலுக்கட்டாயமாக இறக்கி விடப்பட்டு, உடைமைகளும் சாலையில் வீசப்பட்டுள்ளன.ஏழைகள் என்றால் கிள்ளுக்கீரையா? கேட்க நாதி இல்லை எனும் எண்ணமா? மக்களிடம் மரியாதை காட்டாத ஊழியர்கள் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். இதுபோன்ற அவமதிப்புகள் இனியும் நிகழாமல் இருப்பதை போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் உறுதி செய்யவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: