மதத்தினரிடையே மோதல் ஏற்படுத்தும் வகையில் டிவிட்டர் பதிவு பாஜ பிரமுகரை புழல் சிறைக்கு மாற்றக்கோரிய மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பாஜவை சேர்ந்த கல்யாணராமன் டிவிட்டரில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டு வருவதாக தண்டையார்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர் கோபிநாத் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் பதிவான வழக்கில், அக்டோபர் 16ம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கல்யாணராமன் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை குண்டர் சட்டத்தில் அடைத்து அக்டோபர் 23ம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் நிர்வாக காரணங்களுக்காக கடலூர் சிறைக்கு கல்யாணராமன் மாற்றப்பட்டார்.

இதையடுத்து, குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஆட்கொணர்வு மனு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அவரது மனைவி சாந்தி உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொண்ட தனது கணவரை காரணமில்லாமல் கடலூர் சிறையில் அடைத்திருக்கிறார்கள். அவரது கண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை.

எனவே கணவரை சென்னை புழல் சிறைக்கு மாற்றுமாறும் தனியார் மருத்துவமனையில் சொந்த செலவில் உயர் சிகிச்சை எடுத்துக்கொள்ள அனுமதிக்குமாறும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டுமென கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி,  சிறை மாற்றத்திற்கான அவசியம் ஏற்படவில்லை என்றார். இதையடுத்து கல்யாணராமனின் மனைவி தாக்கல் செய்த கூடுதல் மனுவை தள்ளுபடி செய்யப்பட்டது.

Related Stories: