சென்னை: சென்னை தி.நகரை தலைமையிடமாக கொண்டு கோவை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் சூப்பர் சரவணா ஸ்டோர், சரவணா செல்வரத்தினம் குழுமம் இயங்கி வருகிறது. இந்த குழுமத்திற்கு சொந்தமான கடைகள், நகைக்கடைகள், பர்னிச்சர் கடைகள் மூலம் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு பல கோடி ரூபாய் வரிஏய்ப்பு செய்ததாக தொடர் புகார்கள் வந்தது. அந்த புகாரின் படி வருமான வரித்துறை அதிகாரிகள் சூப்பர் சரவணா ஸ்டோர் மற்றும் சரவணா செல்வரத்தினம் குழுமத்திற்கு சொந்தமான சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி மற்றும் உரிமையாளர்கள் வீடுகள் என 37 இடங்களில் கடந்த 1 தேதி முதல் 4ம் தேதி நள்ளிரவு வரை அதிரடி சோதனை நடத்தினர்.
4 நாட்கள் நடந்த தொடர் சோதனையில் பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், இரண்டு விதமாக கணக்குகளை பராமரித்த ஆவணங்கள், ரொக்க பணம், தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.பின்னர் 2 நாட்கள் இரவு பகலாக பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் பணம், தங்க நகைகள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கணக்காய்வு செய்தனர்.அதில், சூப்பர் சரவணா ஸ்டோர், சரவணா செல்வரத்தினம் குழுமத்தினர் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு 1000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக இரண்டு விதமாக கணக்குகளை இந்த குழுமத்தினர் பராமரித்து வந்ததும் சோதனையில் தெரியவந்துள்ளது.
வரி ஏய்ப்பு செய்த பணத்தில் ரூ.150 கோடிக்கு கடைகளுக்கு ஜவுளி மற்றும் தங்கம் வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் கடைகளில் இருந்து வரும் வருமானத்தை மறைத்து, அதற்கு பதில் குறைந்த அளவு வருமானம் வந்ததாக போலியாக விற்பனை ரசீதுகளை தயாரித்துள்ளனர். அதன் மூலம் ரூ.80 கோடி வருவாயை மறைத்துள்ளனர். கடைகளின் வாடகை, ரசீதுகள் இல்லாமல் ரூ.7 கோடி மோசடி செய்து இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், கணக்கில் வராத ரூ.10 கோடி ரொக்கம், ரூ.6 கோடி மதிப்பிலான தங்க நகைகள், தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், சோதனையில் கிடைத்த ஆவணங்களின் படி தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.