பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மீனவர் நலனை காக்கும் தமிழக அரசு-பண்ணை அமைத்தவர்கள் பாராட்டு

தேனி : தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு அமைந்தவுடன் மீன்வளத்துறையில் பல்வேறு நலன்சார்ந்த திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும், தமிழ்நாடு மீனவர் நலவாரியத்தில் 2 ஆயிரத்து 24 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். நடப்பாண்டில் 5 உறுப்பினர்களுக்கு விபத்து மற்றும் நிவாரண உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்திற்கான நிதி மற்றும் திருமண உதவித்தொக, கல்வி உதவித்தொகை என 11 பேருக்கு ரூ.15 லட்சத்திற்கான நிதி வழங்கப்பட்டுள்ளது.

தேசிய வேளாண்மை அபிவிருத்தி நிதியின் கீழ், மரபணு மேம்படுத்தப்பட்ட பண்ணை திலேப்பியா மீன் வளர்க்க, பண்ணை அமைப்பதற்கு 5 பேருக்கு ரூ.1.98 லட்சத்திற்கான நிதி மற்றும் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரிய நிதி மூலம் ஒருங்கிணைந்த அலங்கார மீன்பண்ணை அமைக்கும் திட்டத்தில் 3 பேருக்கு ரூ.26 லட்சம் மானிய நிதி வழங்கப்பட்டள்ளது.

மேலும், தரமான மீன்விற்பனை செய்ய ரூ.10 ஆயிரம் மதிப்பில் 50 பேருக்கு குளிர்சாதன பெட்டிகள், ரூ.10 லட்சம் மதிப்பீட்டிலான நவீன மீன்விற்பனை அங்காடி வண்டி ஒருவருக்கு என ரூ.75 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்டங்களை 105 பேருக்கு மீன்வளத்துறை வழங்கியுள்ளது. மீன்உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் வைகை அணை, மஞ்சளாறு அணை ஆகிய இடங்களில் அரசு மீன் விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டு கட்லா, ரோகு, மிருகால், விராலி ஆகிய இன மீன்குஞ்சுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

தேனி வயல்பட்டியை சேர்ந்த மீனவர் சுரேஷ் கூறுகையில், ‘நான் தமிழ்நாடு மீனவர் நலவாரியத்தில் உறுப்பினராக உள்ளேன். முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும், மீனவர் நலத்துறையில் சில மாற்றங்ளை செய்துள்ளார். இதன்பலனாக, என் பூர்வீக நிலத்தில் மீன் பண்ணை அமைக்க விண்ணப்பித்தேன். அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, எனக்கு மீன் பண்ணை அமைக்க ரூ.36 ஆயிரமும், அரசு மானியத்துடன்கூடிய ரு.1 லட்சத்தை வழங்கினர். இதன்மூலம் தற்போது நல்ல லாபம் கிடைக்கிறது’ என்றார்.

பெரியகுளம் எ.புதுப்பட்டி கணேசன் கூறுகையில், ‘முதல்வர் மு.க.ஸ்டாலின் அலங்கார மீன் வளர்ப்பு பண்ணை அமைக்க மானிய உதவி வழங்குவதை அறிந்தேன். எனது சொந்த நிலத்தில் அலங்கார மீன் வளர்ப்பு பண்ணை அமைக்க மீன்வளத்துறையில் விண்ணப்பித்தேன். அதிகாரிகள் நிலத்தை பார்வையிட்டு எனக்கு ரூ.10 லட்சம் மானியத்துடன் கூடிய ரு.25 லட்சம் வழங்கினர். இதன்மூலம் அலங்கார மீன் பண்ணை அமைத்து மாதம் ரூ.50 ஆயிரம் வரை வருமானம் ஈட்டி வருகிறேன்’ என்றார்.

Related Stories: