திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே தண்ணீர்குளம், ராமாபுரம் கிராமங்களில் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு கடந்த சில நாட்களாக பெய்த கனமழையில் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வீடுகளில் புகுந்துள்ள மழைநீரை அகற்ற ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில், ராமாபுரம் மற்றும் தண்ணீர்குளம் கிராமத்தில் உள்ள வீடுகளில் சூழ்ந்துள்ள மழைநீரை அகற்ற வலியுறுத்தி நேற்று காலை திருவள்ளூர் - ஆவடி நெடுஞ்சாலையில் ராமாபுரம் பஸ் நிறுத்தம் அருகே 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன் மற்றும் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் வீடுகளில் சூழ்ந்துள்ள மழைநீர் வெள்ளத்தை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி கூறினர். போலீசாரின் உறுதியை ஏற்று கிராம மக்கள் கலைந்து சென்றனர்.