கும்பகோணம் அருகே காவிரி ஆற்றின் நடுவில் ஆபத்தான மரப்பாலம்-உயிரை பணையம் வைத்து செல்லும் பொதுமக்கள்

கும்பகோணம் : கும்பகோணம் அருகே திருபுவனத்திற்கும் வேப்பத்தூருக்கும் இடையே காவிரி ஆற்றில் சேதமடைந்த ஆபத்தான மரப்பாலத்தில் பொது மக்கள் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. உடனே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டம் திருபுவனத்திற்கும் வேப்பத்தூருக்கும் இடையே காவிரி ஆற்றில் இருந்த சிமென்ட் கான்கிரீட் பாலம் சேதமடைந்துள்ளது. இந்த சேதமடைந்த பாலம் இடித்து அகற்றப்பட்டது.

இதை தொடர்ந்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைக்கப்பட்ட மரப்பாலமும் சேதமாகி உள்ளது. ஆபத்தான நிலையில் உள்ள இந்த பாலத்தில் மக்கள் உயிரை பணையம் வைத்து சென்று வருகின்றனர். பள்ளி மாணவர்களும் இந்த பாலம் வழியாகதான் சென்று வருகின்றனர்.திருவிசைநல்லூர், வேப்பத்தூர், அம்மன்பேட்டை, போன்ற பகுதிகளிலிருந்து திருபுவனம் சென்று வர பொதுமக்கள் இந்த பாலத்தையே பயன்படுத்தி வருகின்றனர். மாற்றுப்பாதையில் சென்று வரவேண்டுமெனில் கூடுதலாக 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வர வேண்டிய நிலை உள்ளது.

எனவே சேதமுற்ற நிலையில் உள்ள மரப்பாலத்தில் தங்களது உயிரை வைத்து பணயம் வைத்து பள்ளி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் நாள்தோறும் இப்பாலத்தின் வழியே சென்று வருகின்றனர். அரசு உடனடியாக காவிரி ஆற்றில் மரப்பாலத்திற்கு பதிலாக சிமென்ட் கான்கிரீட் பாலம் அமைக்க வேண்டும் தற்போது உள்ள மரப்பாலம் எந்த நேரமும் விழும் அபாயத்தில் உள்ளது. உயிர் சேதம் ஏற்படும் முன்பு பாலத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: