விருதுநகர் மாவட்ட கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் குறைந்த விலையில் தக்காளி, காய்கறிகள் சிறப்பு விற்பனை-கலெக்டர் துவக்கி வைத்தார்

விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் கூட்டுறவுத்துறை மூலம் அமைக்கப்பட்டுள்ள குறைந்த விலையிலான தக்காளி மற்றும் காய்கறி விற்பனையை கலெக்டர் துவக்கி வைத்து பார்வையிட்டார்.இதுகுறித்து கலெக்டர் மேகநாதரெட்டி கூறுகையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் காய்கறி வரத்து குறைந்து விலைகள் உயர்ந்துள்ளது. காய்கறிகளின் விலை உயர்வை கட்டுப்படுத்த கூட்டுறவு நிறுவனங்களால் காய்கறி கொள்முதல் செய்யப்பட்ட அனைத்து காய்கறிகளும் குறிப்பாக தக்காளி குறைந்த விலையில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வெளிச்சந்தையில் தற்போது கிலோ ரூ.130 வரை விற்பனை செய்யப்படும் தக்காளி கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் காய்கறி சிறப்பு விற்பனை மூலம் ரூ.79 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. முதல்கட்டமாக நேற்று 810 கிலோ தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. கொள்முதல் மற்றும் விற்பனையை படிப்படியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

விருதுநகர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை, ராஜபாளையம் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, ராஜபாளையம் கூட்டுறவு விற்பனை சங்கம், சிவகாசி கூட்டுறவு விற்பனை சங்கம், திருவில்லிபுத்தூர் கூட்டுறவு விற்பனை சங்கம், சிவகாசி கார்னேசன் லித்தோ பணியாளர்கள் கூட்டுறவு பண்டகசாலை மூலம் நடமாடும் காய்கறி விற்பனை துவக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார், கண்காணிப்பாளர் ஜெயசங்கர், சிரில் சுபாஷ், சார்பதிவாளர்கள் ராமகிருஷ்ணன், மாரீஸ்வரன், மாரியப்பன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: