பெரம்பூர்: சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் கொளத்தூரில் சில இடங்களிலும், புளியந்தோப்பு பகுதியில் பெரும்பாலான இடங்களிலும் மழைநீர் தேங்கி பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, புளியந்தோப்பு பகுதியில் மழைநீர் வெளியேற 8 நாட்கள் ஆனது. இந்த பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள், குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபடுத்தப்பட்டு நிலைமையை சரி செய்தனர். இந்த பகுதிகளில் மழைநீர் அதிகளவில் தேங்கி நிற்க காரணம் என்ன என்பதை கண்டறிய மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் வல்லுநர் குழுவினர் அடிக்கடி இங்கு வந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று மாலை சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி, பொது தலைமை பொறியாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட குழுவினர் கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட 70 அடி சிவஇளங்கோ சாலை பகுதி, ஜவஹர் நகர் பகுதிகளில் ஆய்வு செய்தனர்.