கொளத்தூர், புளியந்தோப்பு பகுதிகளில் மழை பாதித்த இடங்களை மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

பெரம்பூர்: சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் கொளத்தூரில் சில இடங்களிலும், புளியந்தோப்பு பகுதியில் பெரும்பாலான இடங்களிலும் மழைநீர் தேங்கி பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, புளியந்தோப்பு பகுதியில் மழைநீர் வெளியேற 8 நாட்கள் ஆனது. இந்த பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள், குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபடுத்தப்பட்டு நிலைமையை சரி செய்தனர். இந்த பகுதிகளில் மழைநீர் அதிகளவில் தேங்கி நிற்க காரணம் என்ன என்பதை கண்டறிய மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் வல்லுநர் குழுவினர் அடிக்கடி இங்கு வந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று மாலை சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி, பொது தலைமை பொறியாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட குழுவினர்  கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட 70 அடி சிவஇளங்கோ சாலை பகுதி, ஜவஹர் நகர் பகுதிகளில் ஆய்வு செய்தனர்.  

அப்போது, அப்புறப்படுத்தப்பட்ட மழைநீர் மற்றும் வடிகால் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். இந்த பகுதியில் 10 கால்வாய் அடைப்புகள் சரி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து புளியந்தோப்பு டிக்காஸ்டர் சாலை, கே.பி.பார்க் உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு மேற்கொண்டு, மழைநீருடன் கழிவுநீர் கலந்து வருவதற்கான காரணம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். புளியந்தோப்பு பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆய்வின்போது, மத்திய மேற்பார்வை பொறியாளர் பரந்தாமன், திருவிக நகர் மண்டல அதிகாரி செந்தில் நாதன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: