கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தகவல் பொங்கல் வேட்டி, சேலை உற்பத்தி பணிகள் துரிதம்

சென்னை: பொங்கல் வேட்டி, சேலை துரிதமாக உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார். தமிழக கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் காந்தி கூறியிருப்பதாவது: கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கத்துடனும், வேட்டி சேலை வழங்கும் திட்டம் ஒவ்வொரு ஆண்டும், ஜூன் அல்லது ஜூலை திங்களில் அரசாணை பிறப்பிக்கப்பட்டு, திட்ட நடவடிக்கைகள் தொடங்கப்படுவது வழக்கமான நடைமுறை.  2012-13 மற்றும் 2013-14 ஆண்டுகளில் பொங்கல் பண்டிகையின்போது வழங்கப்படவேண்டிய வேட்டி சேலைகள் முறையே அக்டோபர் 2012லும், மார்ச் 2013லும், ஆகஸ்ட் 2014லும் முன் எப்போதும் இல்லாத வகையில் வெகுதாமதமாக பயனாளிகளுக்கு விநியோகம் செய்து முடிக்கப்பட்டது.

இத்திட்டத்திற்கான அரசாணை ஜூலை 2021 திங்களில் பிறப்பிக்கப்பட்டது. இதன்படி 180.42 லட்சம் சேலைகள், 180.09 லட்சம் வேட்டிகள் விநியோகத்திற்கான உற்பத்தி திட்டம் வழங்கப்பட்டு, துரிதமாக உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  மேலும், கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர், அரசு முதன்மைச் செயலாளர் ஆகியோர் நேற்று தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம், தென்னிந்திய சிறு நூற்பாலைகள் சங்கம் உள்ளிட்ட நூற்பாலைத் துறையினருடன் கோயம்புத்தூரில் கலந்தாலோசனை செய்து, நூல் விலையை குறைக்கவும், வேட்டி சேலை வழங்கும் திட்டத்திற்கு தேவையான நூலினை தடையின்றி வழங்கவும் நூற்பாலைகள் உரிமையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஒட்டுமொத்த ஜவுளி தொழிலை பாதுகாக்கும் வகையில் நூல் விலையை கட்டுக்குள் வைக்கவும், தமிழ்நாட்டிலுள்ள கைத்தறி, விசைத்தறி மற்றும் பின்னலாடை தொழிலாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்கும் தமிழ்நாடு அரசால் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: