சிறுபான்மையினர் நல திட்டங்களை உடனே செயல்படுத்த வேண்டும்; அதிகாரிகளுக்கு அமைச்சர் மஸ்தான் உத்தரவு.!

சென்னை: சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் வழங்கப்படும் திட்டங்களை தொய்வு ஏற்படாமல் செயல்படுத்த வேண்டும் என்று துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் மஸ்தான் கேட்டுக்கொண்டுள்ளார். சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்தான அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களுடன் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில், நலத்துறை சார்பில் செயல்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களிடம் கலந்தாலோசித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘அரசின் சிறுபான்மையினர் தொடர்பான திட்டங்களை எவ்வித தொய்வும் ஏற்படாத வண்ணம் செயல்படுத்திடுமாறும், அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விடுதிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

நலத்திட்ட உதவிகள் மாணவ, மாணவிகள், சிறுபான்மையின மக்களுக்கு எவ்வித தடங்கலும் இல்லாமல் சென்றடைய வேண்டும் எனவும் அமைச்சர் மஸ்தான் அறிவுரை வழங்கினார். இந்த கூட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் கார்த்திக், சிறப்பு செயலர் சம்பத், சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் சுரேஷ்குமார் மற்றும் துறை அதிகாரிகள்  உடனிருந்தனர்.

Related Stories: