ஏடிஎம் வாசலில் கிடந்த ரூ.91 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த எஸ்ஐ

திருவொற்றியூர்: மாதவரம் அடுத்த பெரியசேக்காடு பகுதியை சேர்ந்தவர் பாபு (58). பூக்கடை காவல் நிலையத்தில் சட்டம்- ஒழுங்கு எஸ்ஐயாக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 20ம் தேதி இரவு பணி முடிந்து பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார். மாதவரம் பால்பண்ணை கால்நடை பல்கலைக்கழகம் அருகே சென்றபோது, அங்குள்ள ஒரு ஏடிஎம் மையம் முன்பு ஒரு கருப்பு பை கிடந்தது. சந்தேகத்தின் பேரில், அந்த பையை எடுத்து பார்த்தபோது, அதில், ரூ.91 ஆயிரம் இருந்துள்ளது. அதை, பால்பண்ணை காவல் நிலைய சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சங்கர், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அலமேலு ஆகியோரிடம் ஒப்படைத்தார். எஸ்ஐ பாபுவின் நேர்மையை காவல்துறை உயரதிகாரிகள் பாராட்டினர். அந்த பணம் யாருக்கு சொந்தமானது என போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: