சென்னை: தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் மாநில துணை தலைவர் ரவீந்திரன் தலைமையில் நேற்று இணையவழியில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் உட்பட மாநிலம் முழுவதிலுமிருந்து மாநிலக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியை சுற்றி பல லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப் போராட்டம் வரும் 26ம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைய இருக்கிறது. அதை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பங்கேற்கும் பிரம்மாண்டமான பேரணிகளை நடத்திட ஐக்கிய விவசாயிகள் முன்னணி அறைகூவல் விடுத்துள்ளது.