தரகம்பட்டியில் அரசு கலைக்கல்லூரிக்கு மக்கள் தானமாக கொடுக்கும் 5 ஏக்கர் நிலம்: கலெக்டர் ஆய்வு

கடவூர்: கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், தரகம்பட்டியில் மக்கள் அரசு கலைக்கல்லூரிக்கு தானமாக கொடுக்க இருக்கும் நிலத்தினை கலெக்டர் ஆய்வு செயதார். தரகம்பட்டியில் அரசு கலைக்கல்லூரிக்கு 5 ஏக்கர் தானமாக கொடுக்க இருக்கும் நிலத்தினை நேற்று மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் ஆய்வு செய்தார். தரகம்பட்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டு தற்காலிகமாக தரகம்பட்டி கடவூர் வட்டார வளர்ச்சி அலுவலக கட்டிடத்தில் நடைபெற்று வருகிறது.

அதற்கு புதியதாக நிரந்தர கட்டிடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் தரகம்பட்டியிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ள இடத்தினை தேர்வு செய்தனர். இதனை கண்டித்து தரகம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தி தாசில்தாரிடம் மனு அளித்தனர். கல்லூரிக்கு தேவையான 5 ஏக்கர் நிலத்தினை தரகம்பட்டியைச் சேர்ந்த ஊர்கவுண்டர் மாரியப்பன், ஊர் முக்கியஸ்தர் கிருஷ்ணன், நல்லதம்பி வகையறா, தி.மு.க. பிரமுகர் ஆனந்தன் ஆகியோர் தங்களுக்கு சொந்தமான இடத்தினை தானமாக கொடுக்க முன் வந்தனர்.

இதனை தொடர்ந்து கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் கல்லூரிக்கு தானமாக கொடுக்க இருக்கும் இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சைபுதீன், கோட்டாட்சியர் புஷ்பாதேவி, கல்லூரி துறை திருச்சிராப்பள்ளி மண்டல இணை இயக்குநர் டாக்டர் மேகலா, தரகம்பட்டி கல்லூரி முதல்வர் (பொ) பாலுசாமி, தாசில்தார் ராஜாமணி, இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் சூரியநாராயணன் மற்றும் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: