முழு வீச்சில் நிவாரணப் பணிகள் நடைபெறுகிறது; தொடர் மழையை எதிர்கொள்ள தயார்; அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தகவல்.!

சென்னை: தொடர் மழையை எதிர்கொள்ள தயார்நிலையில் உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது; வடகிழக்கு பருவமழைக்காலத்தில், 1.10.2021 முதல் 20.11.2021 வரை தமிழ்நாட்டில் 518.99 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழையளவைக் காட்டிலும் 68 சதவிகிதம் கூடுதல் ஆகும். தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 37 மாவட்டங்களில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. மாநில சராசரி 6.59 மில்லி மீட்டர். திருப்பத்தூர்  மாவட்டத்தில் அதிகபட்சமாக 39.91 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது.

வடக்கு தமிழ்நாட்டில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து, தெற்கு கர்நாடகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு தமிழ்நாடு, ராயல்சீமா பகுதியில் நிலவுகிறது என்றும், இது மேற்கு வடமேற்காக நகர்ந்து மேலும் வலுவிழக்கக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று நீலகிரி, ஈரோடு, பெரம்பலூர், கிருஷ்ணகிரி, சேலம், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும். 21.11.2021 - அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.

விழுப்புரம் மாவட்டத்தில், தென்பென்னை ஆற்றில் அதிகப்படியான வெள்ளப்பெருக்கின் காரணமாக  பல பகுதிகளில் நீர் தேங்கியுள்ளதோடு, 18,500 ஹெக்டேர் விளை நிலங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ள காரணத்தால், தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 220 நிவாரண முகாம்களில், சுமார் 10000 நபர்கள் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில், தென்பென்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காரணத்தால், குடியிருப்பு பகுதியில் வெள்ள நீர் தேங்கிய காரணத்தால், 4000 நபர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில், பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் வினாடிக்கு 26000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.  ஆற்றின் கரையோரம் வசித்த 50 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில், திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ள காரணத்தால், மழை நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில், திருச்செங்கோடு பகுதியில் மழை நீர் தேங்கியுள்ள காரணத்தால், மழை நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது,  

* கடந்த 24 மணி நேரத்தில், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் 3 நபர்கள் உயிரிழந்துள்ளனர். 368 கால்நடைகள் இறந்துள்ளன.  

* 2286 குடிசைகள் பகுதியாகவும், 94 குடிசைகள் முழுமையாகவும், ஆக மொத்தம் 2380 குடிசைகள் சேதமடைந்துள்ளன. 886 வீடுகள் பகுதியாகவும், 34 வீடுகள் முழுமையாகவும், ஆக மொத்தம் 920 வீடுகள் சேதமடைந்துள்ளன.

* உபரி நீராக முக்கிய நீர்த்தேக்கங்களான, மேட்டூர் அணையிலிருந்து 65,000 கன அடியும், பூண்டியிலிருந்து 29,684 கன அடியும், செங்குன்றத்திலிருந்து 660 கன அடியும், சோழவரம் ஏரியிலிருந்து 400 கன அடியும், செம்பரம்பாக்கத்திலிருந்து 361 கன அடியும் திறந்து விடப்படுகிறது.

* சென்னை மாவட்டத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையின் 2 குழுக்களும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 குழுக்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு குழுவும், வேலூர் மாவட்டத்தில் 2 குழுக்களும் மீட்புப் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

* பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் 54 படகுகளும், மழை நீரை வெளியேற்ற 46 யிசிஙி-களும், 847 இராட்சத பம்புகளும் தயார் நிலையில் உள்ளன.

* இதர மாவட்டங்களில், 3915 மரம் அறுக்கும் இயந்திரங்கள், 2897 யிசிஙி கள், 2115 ஜெனரேட்டர்கள், 483 இராட்சத பம்புகள் உள்ளிட்ட தேடல் மற்றும் மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

* 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5106 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளன.

* தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினரால் பயிற்சி அளிக்கப்பட்ட 3023 காவலர்கள் கடலோர மாவட்டங்களில் தயார் நிலையில் உள்ளனர்,  3685 காவலர்கள் இதர மாவட்டங்களிலும், 834 காவலர்கள் சென்னை மாவட்டத்திலும் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.

* 1.06 இலட்சம் முதல் நிலை மீட்பாளர்கள் கண்டறியப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். இதில் 19,529 பெண் முதல் நிலை மீட்பாளர்கள் ஆவர்.  பேரிடர் காலங்களில் கால்நடைகளை பாதுகாக்க 19,535 முதல் நிலை மீட்பாளர்களும், மழைக்காலங்களில் விழும் மரங்களை வெட்டி அகற்ற 15,912 முதல் நிலை மீட்பாளர்களும், நீச்சல் தெரிந்த 19,547 முதல் நிலை மீட்பாளர்களும் தயார் நிலையில் உள்ளனர்.

* சென்னையில் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் 1070, மாவட்டங்களில் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்கள் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியுடன், 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி தொடர்பான புகார்களுக்கு பொதுமக்கள் 1913 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம்.

* பொதுமக்கள் இணையதளத்திலும், வாட்ஸ் அப் எண் 9445869848 மூலமாகவும் புகார்களை தெரிவிக்கலாம்.

* கனமழை எச்சரிக்கையினை தொடர்ந்து தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* கனமழை நேர்வுகளில் நீர்த்தேக்கங்கள் / அணைகளில் அதிகப்படியான நீர்வரத்து  வர வாய்ப்புள்ளதை கருத்தில் கொண்டு முன்கூட்டியே அணைகளிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டு அணையின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதோடு வெள்ள அபாயத்தை தவிர்க்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories: