சென்னை: ஒன்றிய அரசு 3 வேளாண்மை சட்டத்தை வாபஸ் பெற்றுள்ளது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி என்று அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் கூறினர். வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஒன்றிய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக முதல் குரல் கொடுத்தது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்தான். ஒன்றிய அரசுக்கு எதிராக எதிர்ப்பு குரல் கொடுக்கப்பட்டது. மு.க.ஸ்டாலின் குரல் இந்தியா முழுவதும் ஒலித்தது. தற்போது அந்த போராட்டம் வெற்றி அடைந்துள்ளது. பல விவசாயிகள் உயிரிழப்பு, ஒரு ஆண்டுக்கு மேலாக போராட்டம் என்பது விவசாயிகளின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி என்றார்.