சென்னை: அரசு நிலத்தில் 500 கோடி ரூபாய் மதிப்பிற்கு அனுமதியின்றி கிராவல் மண் எடுத்ததாக முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரும் புகார் ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தேனி மாவட்டம், உப்பார்பட்டியை சேர்ந்த ஞானராஜன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், வட வீரநாயக்கன்பட்டி கிராமத்தில், அரசு நிலங்களிலிருந்து அனுமதியின்றி 500 கோடி ரூபாய் மதிப்பிலான கிராவல் மணலை உதவியாளர்கள் மூலமாக முன்னாள் துணை முதல்வர் பன்னீர்செல்வம் எடுத்துள்ளார். அதிமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்த விஷயத்தில் முறைகேடு நடந்துள்ளது. முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது உதவியாளர் அன்னபிரகாசம் மற்றும் அவரது உறவினர்கள் மூலம் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். அரசு நிலங்களிலிருந்து மணல் எடுத்த பிறகு, அந்த நிலங்கள் தனியார் சொத்துகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.