பொறியியல் கல்லூரிகளுக்கு ஒரே மாதிரியான கிரேடு முறை: அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் தகவல்

சென்னை: தன்னாட்சி பெற்ற பொறியியல் கல்லூரிகள் உள்பட அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் ஒரே மாதிரியான கிரேடு முறை வழங்கப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும், மாணவர்கள் பெறக்கூடிய மதிப்பெண்களுக்கு ஏற்ப O, A, B, C, D, E என கிரேடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் இயங்கி வரும் 60-க்கும் மேற்பட்ட தன்னாட்சி பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்கள் வழங்கப்படுவதோடு மாணவர்களுக்கு வழங்கப்படும் கிரேடுகளில் முறைகேடு நடைபெறுவதாகவும் தன்னாட்சி கல்லூரிகளில் O, A, B, ஆகிய கிரேடுகளை தவிர மற்ற கிரேடுகள் வழங்கப்படுவதில்லை எனவும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு புகார்கள் வந்திருக்கின்றன.

இதனை தடுக்கும் வகையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரே மாதிரியான கிரேடு முறை வழங்க நடவடிக்கை எடுத்துள்ள பல்கலைக்கழக நிர்வாகம் தன்னாட்சி கல்லூரிகளில் பெற்ற மதிப்பெண்கள் பல்கலைக்கழகம் வாயிலாக கணக்கிடப்பட்டு கிரேடுகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் இந்த நடவடிக்கையானது நடப்பு கல்வியாண்டு முதலே முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு செயல்பாட்டுக்கு வர உள்ளதாகவும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: