கொடைக்கானல்: கொடைக்கானல் பேத்துப்பாறையில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை விரட்டுவதற்கு வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பெருமாள் மலையை அடுத்த பேத்துப்பாறை அஞ்சு வீடு, அஞ்சுரான் மந்தை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டு, விவசாய நிலங்கள், விளைபொருட்களை நாசப்படுத்தி வருகிறது. இதனால், அப்பகுதி விவசாயிகளுக்கு பெரும்பாதிப்பு ஏற்பட்டு, விவசாயம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு கோரி விவசாயிகள் வனத்துறையினருக்கும், பழனி தொகுதி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமாருக்கும் கோரிக்கை விடுத்தனர்.