சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும், நேற்று முன்தினம் இரவு முதல் கன மழையானது அதிக காற்றுடன் பெய்ததால் பல இடங்களில் மரங்கள் மற்றும் கிளைகள் சாய்ந்தன. மாநகராட்சி சார்பில் பருவமழை காலத்திற்கு முன்னதாகவே போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் மற்றும் பாதுகாப்பற்ற முறையில் உள்ள மரங்களை அகற்ற ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக 6 நவீன ஹைட்ராலிக் இயந்திரங்களும், 2 மரம் அறுக்கும் இயந்திரம் பொருத்தப்பட்ட வாகனங்களும், 15 மண்டலங்களில் உள்ள கையினால் இயக்கும் 371 மர அறுவை இயந்திரங்களும் ஏற்கனவே அந்தந்த வார்டுகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டன.