ஊட்டி: தெப்பக்காடு முதல் கக்கநல்லா சோதனை சாவடி வரை தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இதில், மேட்டுப்பாளையம் முதல் கூடலூர் வரை தற்போது பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாலைகளை விரிவாக்கம் செய்தல், பாலம் கட்டுதல், தடுப்பு சுவர் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேபோல், சாலை பழுதடைந்தால் சீரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், கூடலூர் அருகேயுள்ள தொரப்பள்ளி முதல் தெப்பக்காடு வரையில் உள்ள சாலை முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ளது.இச்சாலையில் தற்போது பல இடங்களில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இச்சாலை கேரளா மற்றும் கர்நாடகாவை இணைக்கும் முக்கிய சாலையாக இருந்த போதிலும், இச்சாலையை தேசிய நெடுஞ்சாலைத்துறை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால், இச்சாலையில் தெப்பக்காடு முதல் தொரப்பள்ளி வரை பல இடங்களில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.