ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைக்கும்; தண்ணீர் தேங்கிய பகுதிகளில் படகுகள் மூலம் விநியோகிக்கப்படும்; அமைச்சர் நாசர் உறுதி

சென்னை: ஆவின் பால் தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு கிடைக்கும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் உறுதியளித்துள்ளார். சென்னையில் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகள் கடைகளில் மழைநீர் வெள்ளம் சூழ்ந்துள்ளது.இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக,மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நேரில் பார்வையிட்டு, மக்களுக்கு நிவாரணப் பொருட்களை மூன்றாவது நாளாக இன்று வழங்கினார்.

அதேசமயம், அமைச்சர்களும்,அதிகாரிகளும் நிவாரணப்பணிகள் மற்றும் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில்,இன்று காலை சோழிங்கநல்லூர், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள பால்பண்ணை ஆய்வு செய்த பால்வளத்துறை அமைச்சர் நாசர், அங்குள்ள இயந்திரங்கள் மழைநீரில் பாதிக்காதவாறு வைக்கும்படி அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

இந்நிலையில்,சென்னையில் உள்ள பொதுமக்களுக்கு ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைக்கும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் உறுதியளித்துள்ளார்.மேலும், சென்னையில் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் படகுகள் மூலம் ஆவின் பால் விநியோகிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். அதேபோல, நடமாடும் பால் விற்பனை நிலையங்கள் மூலம் பால் விற்பனைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு பால்வளத்துறை அமைச்சர் நாசர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Stories: