சிவகாசி அருகே சாலை நடுவில் மிரட்டும் சேதமடைந்த மின்கம்பம்-மின்வாரியம் நடவடிக்கை எடுக்குமா?

சிவகாசி : சிவகாசி அருகே கொத்தனேரியில் சாலையின் நடுவில் உள்ள சேதமடைந்த மின்கம்பத்தை அகற்ற மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சிவகாசி அருகே கொத்தனேரி கிராமத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு சாலையின் நடுவே மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. கான்கிரீட் கலவையால் உண்டாக்கப்பட்ட இந்த மின்கம்பம் தற்போது ஆங்காங்கே சிமெண்ட் பெயர்ந்த நிலையில் எலும்புக்கூடாக காட்சி தருகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அத்துடன் வீடுகளில் மின்தடை ஏற்படும் நேரங்களில் அவற்றின் மீது ஏறி பணி செய்ய மின் ஊழியர்கள் மறுக்கும் சூழல் உள்ளது.

மழைக்காலங்களில் இந்த மின்கம்பம் அருகே செல்வதை கிராம மக்கள் தவிர்த்து வருகின்றனர். அபாய மின்கம்பங்களால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் வாழ்ந்து வருகின்றனர். உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் இப்பிரச்னையில் காலம் கடத்தாமல், மின்வாரிய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து அபாயகரமாக உள்ள மின்கம்பத்தை மாற்றி தெருவின் ஓரத்தில் நட வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories: