தமிழகத்தில் உள்ள ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் தமிழை பயிற்று மொழியாக்க இயலாது!: ஐகோர்ட் கிளையில் ஒன்றிய அரசு திட்டவட்டம்..!!

மதுரை: தமிழகத்தில் உள்ள ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் தமிழை பயிற்று மொழியாக்க இயலாது, ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் அந்தந்த மாநில மொழிகளை பயிற்று மொழியாக்க இயலாது என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒன்றிய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழை கட்டாய பாடமாக்கவும், பயிற்று மொழியாக்கவும் கோரி தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரை சேர்ந்த செல்வகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை  கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில், தமிழகத்தில் 59 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இயங்கி வருகின்றன.

தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்திக்‍கு பதிலாக தமிழை கட்டாய பாடமாக்கவும், பயிற்று மொழியாக்கவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். மேலும் அந்தந்த மாநில மொழிகளை கட்டாய பாடமாக்கவும், பயிற்று மொழியாக்கவும் உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்நிலையளி, இந்த வழக்கு, நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அச்சமயம் ஒன்றிய அரசு தரப்பில், தமிழ் ஒரு பாடமாக உள்ளதாகவும், தமிழை பயில விரும்பும் மாணவர்கள் அதனை தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஒன்றிய அரசு பணியில் இருக்கும் ஊழியர்களின் குழந்தைகளுக்காகவே நடத்தப்படுவதால், அந்தந்த மாநில மொழிகளை பயிற்று மொழியாக்க இயலாது எனவும் திட்டவட்டமாக தெரிவிக்‍கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வியை வழங்கும் நோக்கிலேயே இந்த பள்ளிகள் நடத்தப்படுவதாக கூறி வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

Related Stories: