மீண்டும் மேடை நாடகங்களில் நடிப்பேன்: கமல் அறிவிப்பு

சென்னை: மீண்டும் மேடை நாடகங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். இதுகுறித்து நேற்று முன்தினம் சென்னையில் நடந்த மேடை நாடக நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: நான் டி.கே.எஸ் நாடகக் குழுவில் இருந்து வந்தவன். எல்லோரும் நாடகத்தில் இருந்து சினிமாவில் நடிக்க செல்வார்கள். நான் சினிமாவில் இருந்து நாடகத்துக்கு வந்தேன். மீண்டும் என்னை சினிமாவை நோக்கி தள்ளிவிட்டது நாடகம்தான். மீண்டும் நாடக மேடைக்கு வர ஆசைப்பட்டேன். யாரும் என்னை இணைத்துக் கொள்ளவில்லை. நான் நாடகத்தின் ரசிகன் என்பதுதான் எனது முதல் தகுதி. நிஜமான திறமையை அடையாளப்படுத்துவது நாடக மேடைதான்.

சினிமாவில் நான் நடிக்கக்கூட தேவையில்லை, ஹோலோகிராம் மூலம் என்னைப் போன்ற உருவத்தை கொண்டு வந்துவிட முடியும். அந்தளவு டெக்னாலஜி வந்துவிட்டது. ஆனால், மேடையில் நிகழ்வதுதான் நிஜமான திறமை. எனக்கு நல்ல நாடகங்கள் பார்க்க மிகவும் பிடிக்கும். மீண்டும் மேடை நாடகங்களில் நடிக்க ஆசை. அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கண்டிப்பாக வேறு மேடை ஏற உள்ளேன். இது அரசியல் மேடை இல்லை. மும்பையில் சசிகபூர், பிரித்வி தியேட்டர் என்ற ஒன்றை நிறுவினார். அதுபோல் ஒன்றை சென்னையில் அமைக்க ஆசைப்படுகிறேன். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

Related Stories: